மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
மதுரை ஆதீன மடத்தில் இன்று (05.05.2012) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. மதுரை ஆதீனம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்ட்ட இந்த ஆதீனத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஆதீனத்தின் 293 வது ஆதீனமாக கடந்த வாரம் நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்த விழாவில் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க மூலாம் பூசப்பட்ட செங்கோலை பரிசாக வழங்கினார். ஆதீனமும் நித்யானந்தாவுக்கு தங்க கீரிடம் சூட்டினார். இதே போல் பெங்களூரில் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டிக் கொண்ட விழாவிலும் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க செங்கோல், கீரிடங்களை வழங்கினார். கடந்த சனிக்கிழமை மதுரை வந்த நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் 2 பேரும் அதிகமான விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். சித்ரா பவுர்ணமி தினமான இன்று இரவு (5 ந்தேதி) திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் இன்று மதியம் புறப்பட திட்டமிட்டு இருந்தார். இந்த விழாவிலும் தங்க செங்கோல், தங்க கீரிடம், தங்க சிம்மாசனம், பாதுகைகள் ஆகியவற்றை மதுரை ஆதீனத்துக்கு அணிவிக்கப்படும் என நித்யானந்தா அறிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களும் அடிக்கடி உலா வந்தன. மதுரை ஆதீனத்துக்குட்பட்ட சொத்துகளுக்கு வரி செலுத்தாமல் ஆதீனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் இன்று காலை 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீனமடத்தில் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் மடத்தின் அனைத்து கதவுகளை உள் புறமாக பூட்டி கொண்டு மடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். சோதனையில் அறைகளில் இருந்து பல கோடிகள் மதிப்புள்ள தங்க நகை, பணம் ஆகியவை ஒரே இடத்தில் குவித்து வைத்து அதனை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். மேலும் நகை, பணத்துக்கு முறைப்படி வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆதீனத்தின் சொத்துக்களின் ஆவணங்களை சோதித்து விசாரணை நடத்தினர். ஆதீனத்துக்குட்பட்ட சொத்துக்கள், மடத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் சம்பளம் ஆகிய விபரங்களை மதுரை ஆதீனத்திடம் கேட்டு பெற்றனர். சமீப காலமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் அதிகளவு ஆபரணங்களை அணிந்து வருகின்றனர். மேலும் மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக என அடிக்கடி வந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார்.