அண்ணியின் கழுத்தை அறுத்த வாலிபர்
கோவையை அடுத்த எஸ்.என். பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி அந்த பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிந்து என்ற பாக்கியலட்சுமி (32). இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பெரியசாமியின் சித்தப்பா மகன் ராஜேஸ் (27). சென்னையில் வேலையில்லாமல் இருந்த ராஜேசை தனது கடைக்கு அழைத்து வந்தார். ஆரம்பத்தில் ராஜேஸ் நல்ல பிள்ளையாகத்தான் இருந்தார். கடைவேலைகளை முழு மூச்சாக செய்து வந்தார். இதனால் பெரியசாமிக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜேசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் வகையில் அண்ணி சிந்துவிடம் சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த சிந்து ஒழுக்கமாக இரு, இல்லையேல் நடப்பதே வேறு என்று எச்சரித்தார். ஆனால் ராஜேஷ் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பொறுமை இழந்த சிந்து தனது அண்ணனிடம் ராஜேசின் அத்துமீறல்கள் பற்றி கூறினார். அவர் ராஜேசை அழைத்து எச்சரித்தார். நம்மை இப்படி காட்டிக்கொடுத்து விட்டாரே என ராஜேஷ் ஆத்திரமடைந்தார்.
கடையில் இருந்த அவர் வீட்டுக்கு சென்று சிந்துவிடம் சண்டை போட்டார். இந்த சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிந்துவின் கழுத்தை அறுத்தார். அவர் அலறி துடிக்கவே ராஜேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதை அறிந்த பொதுமக்கள் ராஜேசை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ்உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கழுத்து அறுபட்ட சிந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.