திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு, விஜபி, விவிஐபிகளுக்கான தரிசனம் ரத்து!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கார்த்திகை தீபத்தை அடுத்து பக்தர்கள் அதிகம் கூடும் விழாவாக சித்திரா பவுர்ணமிக்கு கூடுவர். சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா, சித்திரா பவுர்ணமியை இந்துக்களின் புனித பண்டிகையாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்று தமிழக அரசு, சித்திரா பவுர்ணமியை முக்கிய பண்டிகையாக அறிவித்தார்.
தன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர், இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமியை பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த ஆண்டு வருவாய் துறை, காவல்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளை அழைத்து 02.05.2012 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வந்த கருத்துக்களை கேட்டு, கோவிலுக்குள் சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கான அமர்வு தரிசனத்தையும் ரத்து செய்துள்ளார். இதன் மூலம் அனைவரும் ஒரே வழியில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்துக்கும் பார்க்சிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேலான போலீசார் ஈடுபடவுள்ளனர்.