மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் செய்தியாளர்களிடம், ’’தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் வழங்குவதற்காக 4 கோடியே 70 லட்சம் புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. சென்னை, சிவகாசி, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் 129 பதிப்பகங்கள் மூலம் இந்த புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. 10-ம் வகுப்பு புத்தக விற்பனை ஏப்ரல் 26-ந்தேதி தொடங்கியது. 4 நாட்களில் 60 சதவீத புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. இலவச புத்தகங்கள் வருகிற 5-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். பிளஸ்-2 புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. ஒரு வாரத்துக்குள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளின் புத்தக சுமையை குறைக்க மூன்று பருவமுறை அமுல்படுத்தப்படுகிறது. இதில் முதல் பருவத்துக்காக 1 கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. வருகிற 15-ந்தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 62 மையங்களுக்கும் அனைத்து வகுப்புக்களுக்கான புத்தகங் களும் அனுப்பி வைக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஜூன் 1-ந்தேதி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகளுக்கு இலவச அட்லஸ் புத்தகம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ- மாணவிகளுக்கு இலவச அட்லஸ் புத்தகம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.23 கோடி செலவில் 46 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த வருடம் ரூ.170 கோடி செலவில் மொத்தம் 8 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்வழி கற்றல் அட்டைகளும் அச்சிடப்படுகின்றன. 1 முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான புத்தகங்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும். தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் இருந்து இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்’’என்று கூறினார்.