திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், கடந்த 16ம் தேதி நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாணவர்களுக்கு "பிட்' வழங்கிய ஆசிரியர்களை, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கையும் களவுமாக பிடித்தார். இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சவுமியா, தேர்வுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் மீது, கிரிமினல் வழக்கு தொடர, கல்வித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், கல்வித் துறை அதிகாரிகள், போலீசில் வலுவில்லாமல் புகார் தயார் செய்து கொடுத்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தினால், மேலும் சில முக்கிய கல்வித் துறை அதிகாரிகள் சிக்குவர் என்பதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நூர்ஜகான், குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதனால், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்த புகாரில், பிட் கொடுத்ததற்கு உடந்தையாகச் செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சவுமியா, தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் தனபால், பாபு, செந்தில்குமார், மணிமேகலை, மேரி பிளாரன்ஸ், விஜயசூரியகலா, பன்னீர்செல்வம், பிட் கொடுக்குமாறு மொபைல் போனில் பேசிய ஆசிரியர் தங்கமுருகன் மற்றும் மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளி ஆய்வக உதவியாளர் வரலட்சுமி மற்றும் பெயர் குறிப்பிடாத பள்ளி ஊழியர்கள் மீது, புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
என்னென்ன பிரிவு வழக்கு?
ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் 12 ÷ பர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரம்:* ஐ.பி.சி.120 பி (குழுவாகச் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது)* 117 பிரிவு (குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பது)* 420 பிரிவு (மோசடி, நம்பிக்கை துரோகம்)* 468 பிரிவு (மோசடிக்காக ஆவணங்களை மாற்றுவதுமற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் கீழ் பிரிவு 13(1), (டி)(2))