மன்னார்குடியில் வருமான வரி சோதனை
திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் சிவ காமராஜ். இவர் மாநில துணைப் பொறுப்பிலும் உள்ளார்.
இவருக்கு சொந்தமான சாந்தி நிதியகம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ளது. வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கு (ஓய்வு பெற்ற ஆசிரியர்) சொந்தமான டிபார்ண்ட் மென்ட் ஸ்டோரில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிய கடைகளான இவை இரண்டிலும் சோதனை நடப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வருமான வரிதுறை சோதனையில் சிக்கியுள்ளவர்கள் கூறியதாவது, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் ரயில்வே ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலுவை விருந்தாளி விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் பட்டுக்கோட்டை மன்னார்குடிக்கு டி.ஆர்.பாலு முயற்சியில் கொண்டுவரப்பட்ட புதிய ரயில்பாதை திட்டமும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் பேசினார்.
இதனைத் கண்டித்து மன்னார்குடி வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மன்னார்குடியில் பழனிமாணிக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக பிரமுகர் சிவ காமராஜ், திமுக பிரமுகர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பழனி மாணிக்கத்தை விமர்சனம் செய்து பேசியுள்ளனர். அதற்கு பழிவாங்கும் எண்ணத்திலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.