உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு
உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்தின் மேல் சபையில் 13 காலியிடங்களுக்கான உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் தற்போதைய முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் உள்பட 8 பேர் மேல் சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, அகிலேஷ் யாதவ் சட்டசபையின் 2 சபைகளிலும் உறுப்பினராக இல்லை. தற்பொழுது மேல் சபை உறுப்பினர் ஆனதை அடுத்து, தனது கன்னவுஜ் தொகுதி எம்.பி. பதவியை அகிலேஷ் ராஜினாமா செய்கிறார்.
மேலும், இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் 3 பேரும், பா.ஜனதா மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சியின் சார்பில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 13 பேர் மேல் சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.