மோட்டார் சைக்கிள் பஞ்சர் :ரசிகர்களிடம் சிக்கிய டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனதால் ரசிகர்களிடம் சிக்கினார்.
5-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- புனேவாரியர்ஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இந்த ஆட்டம் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஆந்திர மாநிலத்தில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து இருந்தார்.
இதையடுத்து, டோனியின் மோட்டார் சைக்கிள் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இறக்கப்பட்டது.
பாடியநல்லுர் மேம்பாலத்தில் டோனி வந்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளின் முன் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் வண்டியை நிறுத்திய டோனி ஹெல்மெட்டை கழற்றி சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.
சாலையோரம் நின்று கொண்டு இருந்த டோனியை பார்த்த அவருடை ரசிகர்கள் டோனியை சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து, மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு டோனி காரில் ஏறிச்சென்றார். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டோனியின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு புது டியூப் மாற்றி செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.