தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு! கலைஞர் பேச்சு!

நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வாளர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.
மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் 15.04.2012 அன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசுகையில்,
நடந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தது. அடிக்க அடிக்க பந்து எழுவதுபோல், தோற்க தோற்கத்தான் தி.மு.க.வுக்கு விறுவிறுப்பும், சுறுசுறுப்பும் வரும் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சான்று.
நேற்று தந்தை பெரியார் பற்றிய ஒரு படம் பார்த்தேன். தமிழ் இனத்தின் எழுச்சிக்கு பாடுபட்டவர் அவர். சாதி, மத, ஆண்டவன் பெயரால் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் பாடுபட்டார். நீ மண் அல்ல, மனிதன் என்று சுயமரியாதையை சுட்டிக்காட்டியவர் பெரியார். அதற்காகத்தான் அவர் ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்தார். சூத்திர பட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நிறைவேற்றுவது நாம் காட்டும் மரியாதை, உரிமை ஆகும். அதற்காக பாடுபடவேண்டும்.
நமக்குள்ள கலை, பண்பாடு, மொழி ஆகியவற்றை காப்பாற்ற பாடுபடுகிறோம். இன்று தி.மு.க.வை நமக்கென மொழி, இனம் உண்டு. நாம் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என உணர வேண்டும்.
தி.மு.க. என்ற பெயரை நாம் ஏன் கொண்டு வந்தோம். முதலில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்று கூறினார்கள். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் சிந்தித்து திராவிட என்ற சொல்லை இயக்கத்துடன் இணைத்தனர். இன்று உறுதியான மனப்பான்மையுடன் தி.மு.க.காரன் என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகிறது. இதற்கு காரணம் பெரியார், அண்ணா ஊட்டிய உணர்வு. தமிழ் மொழியை யார் அழிக்க முற்பட்டாலும் அதற்கு வழிவிடாமல் காக்கும் பாசறை தி.மு.க..
ஆனால், தமிழை அழிப்பவன் கருணாநிதி என்று சொல்கிறார்கள். அதுவும், கல்லக்குடி கொண்டு வந்த கருணாநிதியை பார்த்து சொல்கிறார்கள். நீங்கள் விழிப்போடு இதை கவனிக்கவேண்டும். தி.மு.க. நடத்திய மாநாடு, கூட்டங்களில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. உலகத்தில் 5, 6 மொழிகள் தான் செம்மொழி தகுதி பெற்றது. அந்த தகுதி தமிழ் மொழிக்கும் உண்டு என்று போராடியவர்களில் நானும் ஒருவன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இதை நான் விளக்கிக் கூறினேன். அவரும், எனக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு மூலம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். 100 ஆண்டு தமிழறிஞர்கள் போராடியதன் பலன் தி.மு.க. முயற்சிக்கு கிடைத்தது. ஆனால், தற்போதை ஆட்சியாளர்கள் செம்மொழி என்ற பெயரே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தமிழுக்கு பாடுபடுவதாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி மையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தெருவில் தூக்கி போட்டார்கள். தற்போது தமிழ்த்தாய் விருது வழங்குகிறேன் என்ற தமிழ்த் தாயை அவமானப்படுத்தும் வகையில் விருது வழங்கியிருக்கிறார்கள். தமிழுக்காக பாடுபட்டவர்கள் போராடியவர்கள் தியாகம் செய்தவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை. தமிழ் பற்றி கவலைப்படாதவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள் எடுத்துச் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு தை முதல் நாளைத்தான் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து சட்டமாக்கினேன். ஆனால், இவர்கள் அதை ஒழித்துக் கட்டிவிட்டு விழா கொண்டாடுகிறார்கள். நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வாளர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கப்படும். இவ்வாறு பேசினார்.