அரசு என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி: அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் இசபெல்லா தோபர்ன் என்ற கல்லூரி உள்ளது. இதன் 125 வது ஆண்டு நிறைவு விழா (13.04.2012) கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக அந்த மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: வருகிற ஆண்டுகளில் அரசு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். முக்கிய நகரங்களில் அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்படும்.
தொழில் அதிபர்கள் புதிதாக தொழிற்சாலைகள் தொடங்க தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கும். இவற்றின் மூலம் ஏராளமான இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பு பெற முடியும்.
சமாஜ்வாடி கட்சி ஆங்கில மொழிக்கும், கம்ப்யூட்டருக்கும் எதிரி என்று பொது மக்களில் ஒரு சாரார் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறான எண்ணம். ஆகவே, அந்த எண்ணத்தைப் போக்க இந்த முறை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர்களும், கால்குலேட்டர்களும் அளிக்கப்படுகின்றன.
இவற்றின் மூலம் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் இளைஞர்களின் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இங்கு புதிதாக விடுதி கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளிக்கப்படும்.
மேலும், இந்த கல்லூரியை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்த அரசு தேவையான உதவிகளை அளிக்கும். இந்த கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.