இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, ‘’இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இதுவரை 12 மில்லியன் இளைஞர் களை சந்தித்துள்ளேன். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சி மற்றும் கடின பயிற்சி மூலம் தனிப்பட்ட ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இதனால் இந்தியா 2020-ல் வல்லரசாகும்.
அனைவருக்கும் தரமான தண்ணீர், மின்சாரம் சம பங்களிப்போடு வழங்கப்பட வேண்டும். விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை துறை ஒருங்கே வளர்ச்சி அடைய வேண்டும். சமுதாயம் மற்றும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் திறமையான அறிஞர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள் சேரும் இடமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சிறப்பான சுகாதார வசதி கிடைக்க வேண்டும். நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகம் இருக்க வேண்டும். வறுமை, கல்வி அறிவு இன்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
வளமான ஆரோக்கியமான பயங்கரவாதம் இல்லாத அமைதியான நாடாக இருக்க வேண்டும். வாழ்வதற்கும் சிறந்த இடமாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தியா வல்லரசாகும். உலக அளவில் இப்போது தொழில் நுட்பத்தில் புதிய போக்கு பெருகி வருகிறது. 21-ம் நூற்றாண்டில் புதிய பரிமாணமாக அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஒன்றாக செல்கிறது.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகள் திறம்பட செயலாற்றி தனித்திறமை களை வளர்க்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.