அஞ்ச மாட்டேன்: வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி வீரபாண்டி ஆறுமுகம் கூறியதாவது: நேற்று (11.04.2012) மாலை நான் வீட்டில் இருந்த போது மாலை 6.30 மணிக்கு எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. யார் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது எந்த பதிலும் கூறவில்லை. முதலில் பதில் கூற மறுத்து விட்டு பின்னர் பேசிய மர்ம நபர் அடுத்த டார்க்கெட் நீதான் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதுபற்றி நான் எனது வக்கீல் மூலம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து உள்ளேன். இந்த கொலை மிரட்டலுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்றார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதால் உங்களது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று கேட்பீர்களா என்று கேட்டதற்கு, எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கமாட்டேன். எனது பாதுகாப்பை நானே சமாளித்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.