ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
செம்மரக் கட்டைகள் ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீஸார் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்குரிய நாட்டுப்படகை கியூ பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்படகில் 7அடி நீளத்தில் 62 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு மரக்கட்டையும் சுமார் 20 முதல் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இதன்பின்னர் மரக் கட்டைகளுடன், நாட்டுப்படகை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செம்மரக் கட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும், படகு ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இக்கட்டைகளை ராமேசுவரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் கணேசன் பார்வையிட்டார். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர். மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கடத்தலுக்கு உடந்தையான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.