காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அடுத்துள்ள வடபழஞ்சி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் திருப்பதி(வயது 25) ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கனகவள்ளி. அவர்களுடைய மகன் மகள்களான ஸ்ரீதரன்(6), ஸ்ரீஹரிணி(5) இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 08.04.2012 இரவு திருப்பதி தனது குழந்தைகள் இருவரையும் ஆட்டோவில் வெளியே அழைத்துச் சென்றார். பின்னர் அந்த பகுதியில் ஒரு கிணற்றுக்குச் சென்ற அவர் குழந்தைகளை திடீரென்று கிணற்றில் வீசினார். நீச்சல் தெரியாத இரு குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தன.
இது குறித்து திருப்பதியின் மனைவி கனகவள்ளி, நாகமலைப்புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஆட்டோ டிரைவர் திருப்பதியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:
திருப்பதி ஆட்டோ டிரைவர் என்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வருவார். அப்போது மங்கள்ரேவ் பகுதியை சேர்ந்த பிரேமலதா (32) என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர் எழுமலை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பிரேமலதாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவருடைய கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டதால் பிரேமலதா தனிமையில் வாடினார். அடிக்கடி திருப்பதி ஆட்டோவில் பிரேமலதா சென்றதால் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த தகவல் திருப்பதியின் மனைவி கனகவள்ளிக்கு தெரியவந்தால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் திருப்பதி, பிரேமலதாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
தனது விருப்பதை பிரேமலதாவிடம் தெரிவித்தார். அதற்கு பிரேமலதா, "நமது திருமணத்திற்கு தடையாக உள்ள உனது குழந்தைகளை கொன்று விடவேண்டும். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று கூறியதாக தெரிகிறது.
காதலியைக் கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்ய திருப்பதி துணிந்தார். இதற்காக தன் நண்பர் பெரியகருப்பனின் உதவியை நாடினார். அவரும் குழந்தைகளை கொல்ல் உதவி செய்தார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.
திருப்பதி தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய நண்பர் பெரியகருப்பன், ஆசிரியை பிரேமலதா ஆகியோரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.