சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
இலங்கையில் போரினால் பாதித்த பகுதிகளில் தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பதை சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு நேரில் ஆராய்கிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. போருக்குப் பிந்தைய நல்லெண்ண நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது, அவர் இந்தியாவிலிருந்து அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவும் வந்து நிலைமையை நேரில் ஆராயும் என்று அறிவித்தார்.
அதன்படி, இலங்கையில் போரினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளையும், தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படும் நிலையையும் நேரில் பார்வையிடுவதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 15 உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வரும் 16 ந் தேதி இலங்கை செல்கிறது. இந்த குழுவினர் 21 ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வார்கள்.
இந்தக்குழுவில் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர், எம்.கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்), டி.கே.எஸ். இளங்கோவன், பிரகலாத் ஜோஷி, சி.பி. தாகூர் (பா.ஜனதா), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. எம்.பி.யும் இடம் பெறுகிறார்.
இலங்கை செல்கிற எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது, தமிழர்களுக்கு சம அதிகாரம் அளித்து, மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ விரைவில் வழிவகை காணவேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.
30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரால் சின்னாபின்னமாகி உள்ள இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கும் எம்.பி.க்கள் குழுவினர் சென்று நிலைமையை நேரில் ஆராய்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்த மக்களை மறு குடியமர்த்துதல் பணிகள் நடைபெறுவதையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். தமிழர்களின் உண்மையான நிலை என்ன என்பதையும் அவர்கள் ஆராய்வார்கள். அங்கு தமிழ் மக்களை சந்தித்துப்பேசுவதுடன், தமிழ்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து போருக்கு பிந்தைய நிலை பற்றி விவாதிப்பார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் செல்வது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.