கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
முன்னாள் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன். அவரது மகன் ரமேஷ். விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (10.04.2012) அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஒரு கும்பல் ரமேஷை கடத்தியுள்ளது என்று போலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ரமேஷை கடத்தியது ரவுடி கும்பலா அல்லது போலீசாரா என்று கேகேஎஸ்எஸ்ஆர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உரைந்ததால், கேகேஎஸ்எஸ்ஆர் ஆதரவாளர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர்.
கொலை வழக்கு ஒன்றில் கைதான திமுக பிரமுகரான சாகுல் ஹமீதை, விடுவிக்க கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ். ராமச்சந்திரன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காகவே, அவரது மகனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவல்நிலையத்தில் ரமேஷ் மற்றும் திமுக ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணனையும் விருதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக, காலை 8 மணி அளவில் தகவல் வந்ததாக கேகேஎஸ்எஸ்ஆர் குடும்பதினர் தெரிவித்தனர். இதனால் விருதுநகர் திமுகவினரிடையே கடத்தல் பதட்டம் நீங்கியது.