சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே விலை வாசி உயர்வு, தொடர் மின் வெட்டை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த் தியது. தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், விலைவாசியை குறைப்போம் என்று கூறியது. ஆனால் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை அதிக அளவு உயர்த்திவிட்டு, மிகக் குறைந்த அளவு மட்டுமே குறைத்துள்ளனர்.
எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், முத்துக்குமரன் தன்னுடைய ஏழ்மை நிலையை மாற்ற முயற்சிக்கவில்லை. மாற்றாக மக்களின் ஏழ்மை நிலையை மாற்ற வேண்டும் என்று உழைத்தவர். முத்துக்குமரன் இறந்ததால், இந்த தொகுதியை இந்திய கம்யூனிஸ்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மந்திரிகள் புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
ஒரு வகையில் முத்துக்குமரன், புதுக்கோட்டை மக்களுக்கு நன்மை செய்துள்ளார். அவர் இறந்ததால், இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள், புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே வருகிற தேர்தலில் பொதுமக்கள் மவுனப்புரட்சி மூலம் பாடம் கற்பித்து, ஆணவம் மிகுந்தவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.