கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் பிரியங்கா (வயது22). கர்ப்பிணியான இவர் மாமல்லபுரம் அடுத்த வடகடும்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கர்ப்ப கால பரிசோதனைகளை செய்து வந்தார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வடகடும்பாடியை சேர்ந்த ஜெயராமனின் மனைவி அஞ்சலை (வயது50) என்பவர் நர்சாக வேலை செய்து வந்தார். இவர், கர்ப்பிணிப் பெண் பிரியங்காவிடம் தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம்மாள் கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி தொகையை நீ பெற வேண்டும் என்றால், நான் மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதற்காக நீ எனக்கு ரூ.1,500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனால் பிரியங்கா, என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்றார். அதற்கு நர்ஸ் அஞ்சலை சரி குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் உனக்கு தமிழக அரசின் நிதி உதவி கிடைக்கும் என்றார். ஆனால் பிரியங்காவுக்கு லஞ்சப்பணம் கொடுக்க மனமில்லை. இதனால் அவர் நடந்த விவரங்களை தனது மாமியார் ஆண்டாளிடம் கூறினார்.
ஆண்டாள் இதுகுறித்து காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன், பெண் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வடகடும்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மறைவாக காத்திருந்தனர். அப்போது அங்குவந்த கர்ப்பிணி பெண் பிரியங்கா, நர்ஸ் அஞ்சலையிடம் அரசு நிதியுதவி பெற ரூ.1000 லஞ்சம் கொடுத்தார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று லஞ்சம் வாங்கிய நர்ஸ் அஞ்சலையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நர்ஸ் அஞ்சலை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.