சென்னையில் ஐ.பி.எல். போட்டி கோலாகல தொடக்கம்! அமிதாப்பச்சன் உள்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு!
5வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
ஐ.பி.எல். போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு வண்ணமயமாக தொடங்குகிறது
தொடக்க விழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். அவர் இந்தி கவிஞர் பிரசூன் ஜோஷியனின் கிரிக்கெட் குறித்த கவிதையை வாசிக்கிறார். அத்துடன் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளின் கேப்டன்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு பாடலுடன் நடனமாடி ரசிகர்களை மயக்க இருக்கிறார். மேலும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. அவர் 2 பாட்டுக்கு ஆடுகிறார். அத்துடன் பாப் பாடகியுடன் இணைந்தும் அவர் நடனமாடுகிறார்.
இந்தி நடிகர் சல்மான்கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு நடனமாடி கலக்க இருக்கிறார்கள். தொடக்க விழாவுக்காக பிரமாண்டமான மேடை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் லேசர் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.