வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை வடபழனி முருகன் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் துரை (60). கடந்த 20 ஆண்டுகளாக இவர் கோவிலில் பூஜை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி ஹேமாவதியுடன் அரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு வயிறு வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் துடி துடித்தார். இதையடுத்து அவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மஞ்சள் காமாலைக்காக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. நேற்று இரவு ஹேமாவதி யும், அர்ச்சகர் துரையும் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் துரைக்கு மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்தார். பின்னர் அவர் நோயாளி ஒருவரிடம் தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதாக கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்த ஹேமாவதி கணவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.