கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடு களையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது.
புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வரும் ஏப்ரல் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி 40 நாள் தவக்காலம் இன்று துவங்கியது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கின்ற திருப்பலியின்போது பங்குதந்தையர்கள் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கினர்.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் இன்று காலை நடந்த திருப்பலியில் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கினார். தவக்காலம் தொடங்குவதற்கு அடையாளமாக இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது எடுத்துச்செல்லப்பட்ட ஓலைகளை கொண்டு இந்த சாம்பல் தயார் செய்யப்படும். சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயங்களில் மாலையில் திருப்பலி நடக்கிறது.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படும். புனிதவாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறு திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளியாகவும் ஏப்.8ந் தேதி கிறிஸ்து உயிர்த்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.