சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன சென்னை நகரில் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவாகரத்து வழக்குகள் அதிகமாக பதிவாகி வந்தன. தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட விவாகரத்துக்கு கொண்டு போய் விட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை பேசி தீர்த்து வைக்க, வீட்டில் பெரிய ஆட்கள் இல்லாதது, தனிக்குடித்தனம் என்ற நிலைதான் என்று, பல ஆய்வுகளில் தெரிய வந்தன. இந்த போக்கை சரி செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக, சென்னையில் விவாகரத்து வழக்குகள் குறைய தொடங்கி உள்ளன. விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளை, ஒரே இடத்தில் உட்கார வைத்து மனம் விட்டு பேச வைப்பது கவுன்சிலிங் செய்வது, தியான பயிற்சிக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை குடும்ப நல நீதிமன்றங்கள் மேற்கொள்கின்றன. இதனால் தம்பதிகளிடையே மனக் கசப்பு, கருத்து வேறுபாடுகள் நீங்கி சமரசம் ஏற்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக பெரிய அளவில் இல்லாவிட்டாலும், விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2010ல் சென்னையில் 3,803 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. கடந்த ஆண்டில் சற்று குறைந்து 3,742 வழக்குகள் (61 குறைவு) பதிவானது. இந்த ஆண்டில் இதை விட அதிகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கடைப் பிடிக்கப்படும் முறை, மாநிலத்தில் உள்ள மற்ற குடும்ப நல கோர்ட்டுகளிலும் பின்பற்றப்படுவதால், அங்கும் விவாகரத்து வழக்குகள் குறைந்துள்ளதாக மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.