நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கடந்த 21ஆம் தேதி, பொள்ளாச்சி சந்தைபேட்டை பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஆணைமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அந்த காரில் திரைப்பட நடிகை பானுப்பிரியா இருந்துள்ளார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக பொள்ளாச்சி வந்துள்ளதாகவும், இந்த கார் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கார் என்றும் கூறியுள்ளார்.
அந்த காருக்கான ஆவணங்களை சோதனை செய்ததில் சொந்த பயன்பாட்டிர்க்கான காரை திரைப்பட நிறுவனத்துக்கு வாடகைக்கு விடுவது தெரிந்துள்ளது. இதற்குள் நடிகை காரில் இருக்கிறார் என்ற தகவல் அக்கம் பக்கம் தெரிந்துவிட அந்த காரை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.
உடனடியாக நடிகை பானுப்பிரியாவை அவர் தங்கியுள்ள விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு காரை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு வரும்படி ஓட்டுனருக்கு உத்தரவிட்டுள்ளார் சத்தியமூர்த்தி.
நடிகையை விடுதியில் விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ள அதிகாரிகள், சொந்த உபயோகத்துக்கான காரை, வாடகைக்கு விட்டுள்ள காரணத்தால் அந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.
வாடகை கார்களுக்கு (மஞ்சள் போர்டு) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அரசுக்கு வரிகட்டவேண்டும், ஆனால், சொந்த கார்களுக்கு (வெள்ளை போர்டு) வரி கட்ட தேவையில்லை என்பதால், பல இடங்களில் சொந்த உபயோகத்துக்கான கார்களை வாடகைக்கு விடுகிறார்கள்.
பொள்ளாச்சியை சேர்ந்த வேல்முருகன் என்பவர், விருதுநகரை சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவரிடம் விலைக்கு வாங்கிய சொந்த உபயோகத்துக்கான காரை பெயர் மாற்றமும் செய்யாமல், திரைப்பட நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அரசுக்கு வரிகட்டாமல் ஏமாற்றியதற்காக அந்த காரை வைத்திருக்கும் வேல்முருகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூடுதலாக மூவாயிரம் ரூபாய் அவர் அபராதம் செலுத்தவேண்டும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.