மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் இன்று (22.02.2012) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை.
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், சீரான மின்விநியோகம் வழங்க கோரியும் திருப்பூரில் இன்று (22.02.2012) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தொழில் பாதுகாப்பு குழு அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தில் 51 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. இந்த போராட்டம் காரணமாக வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. சாயப்பட்டறை, விசைத்தறி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் மூடப்பட்டுள்ளன.