நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை!மதுரை ஐகோர்ட் உத்தரவு!
தேர்தல் விதியை மீறியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை குஷ்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை (இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளராக உள்ளார்) ஆதரித்தும் அந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.சுபாஷ்பாபு, மோகன்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது.
எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்காக கீழ்கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.