ராஜபக்சே வருகையை கண்டித்து
பாமக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
அவர் இந்தியா வந்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் இந்தியா வந்ததை கண்டித்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் தலைமை தாங்கினார். தாந்தோணி நகர செயலாளர் எஸ்.பி.குமார், ஒன்றிய செயலாளர்கள் சாதிக்அலி, செந்தில், ராஜா, விஜயகுமார், சரவணன் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டித்து,
அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்திய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று பல்வேறு கோஷங்கள் போட்ட படி ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.
இந்த நிலையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டு இருந்த போது அங்கிருந்த தாந்தோணி நகர இளைஞர் அணி செயலாளர் பெருமாள் (வயது25) ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டிக்கிறேன் என்று கூச்சலிட்டபடி திடீரென்று தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ரோட்டின் தடுப்பு சுவரில் மண்எண்ணெய் கேனுடன் ஏறி, மண் எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டே ஓடினார்.
பின்னர் தீப்பெட்டியை எடுத்து தனது உடலில் பற்ற வைக்க முயன்றார். அப்போது தீப்பெட்டியை பற்ற வைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று பெருமாளிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி கீழே எரிந்தனர். பின்னர் மண்எண்ணெய் பற்றி இருந்த அவரது சட்டையை கழற்றி அவரை காப்பாற்றி அழைத்து வந்தனர்.
இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜபக்சே உருவ பொம்மை எரித்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.