மவுனமாக இருப்பதே சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தான் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சிற்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஈரானில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் வழியில் விமானத்தில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,
இவ்விவகாரத்தில் நான் மவுனமாக இருப்பதே சிறந்தது. பாரதிய ஜனதா கட்சியின் புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்ததற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசை கவிழ்க்கும் சதியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.