சென்னையில் 2வது துணை தூதரகத்தை தொடங்குகிறது பெல்ஜியம்
இந்தியாவில் பெல்ஜியம் நாடு தனது இரண்டாவது துணை தூதரகத்தை அடுத்த வருடம் சென்னையில் தொடங்குகிறது என்று பெல்ஜியம் நாட்டின் துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் இன்று நிருபர்களிடம் கூறினார்.
இந்தியாவில் பெல்ஜியம் நாட்டுக்கு ஏற்கெனவே புதுடெல்லியில் தூதரகமும் விசா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மும்பையில் துணை தூதரகமும் இருக்கிறது. மற்றொரு துணை தூதரகத்தை சென்னையில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சென்னையில் துணை தூதரகத்தை அமைக்கும் பணி தொடர்பாக பெல்ஜியத்தின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டிதியர் ரேய்ன்டர்ஸ் மிக ஆவலுடன் இருக்கின்றனர். சென்னையில் அமையவிருக்கும் துணை தூதரகத்தை அநேகமாக அடுத்த வருடம் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் பெல்ஜியம் இளவரசர் பிலிப் தொடங்கிவைப்பார் என்று பெல்ஜியம் நாட்டின் துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் இன்று நிருபர்களிடம் கூறினார்.