காதலிக்கு தன்னையே கூரியரில் பார்சல் அனுப்பிய வாலிபர்: தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்
சீனாவில் தென்மேற்கில் உள்ள சாங்குயிங் நகரை சேர்ந்தவர் ஹூசெங் (30). இவர் லீ வங் என்ற பெண்ணை காதலித்தார். அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி தன்னையே கூரியரில் பார்சல் மூலம் அனுப்ப முடிவு செய்தனர்.
அதற்காக ஒரு கார்போர்டு அட்டை பெட்டிக்குள் இவரை வைத்து அவரது நண்பர் ஒருவர் பார்சல் செய்தார். அதை ஒரு தனியார் கூரியர் நிறுவனத்துக்கு எடுத்து சென்று காதலி லீ வங் அலுவலக விலாசத்துக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில் அலுவலக வாசலில் மற்றொரு நண்பர் வீடியோ காமிரா மூலம் காத்திருந்தார்.
ஏனெனில் பார்சலில் இருந்து அவர் குதித்து வெளியே வந்தவுடன் காதலி லீ வங் முகத்தில் பிரதிபலிக்கும் ஆச்சரியத்தை படம் பிடிக்கவே அவர் தயாராக இருந்தார். இந்த பார்சல் 30 நிமிட நேரத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விலாசம் குளறுபடி காரணமாக காதலி அலுவலகத்துக்கு பார்சல் வந்து சேர தாமதமாகி விட்டது. இதனால் ஹூ செங் பார்சலுக்குள் சிக்கி கொண்டார்.
பார்சலை உடைத்துக் கொண்டு வெளியே வர அவர் முயன்றார். ஆனால் கார் போர்டு அட்டை மிகவும் தடிமனாக இருந்தது. மேலும் பலமாக பார்சல் செய்யப்பட்டிருந்தது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. 3 மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்த போது லீ வங்கிக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அதிர்ச்சி தான் கிடைத்தது.
பார்சலுக்குள் அவர் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இதை கூரியர் நிறுவனத்தின் மூலம் விலங்குகளை பார்சலில் அனுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு மனிதரை அனுப்புவதாக யாரும் தெரிவிக்கவில்லை.
அவ்வாறு கூறியிருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்போம் என கூரியர் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.