திருச்சியில் நடக்க இருந்த இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி ரத்து
இலங்கை தலைநகர் கொழும்பை சேர்ந்த 54 மாணவ, மாணவிகள் உள்பட 70 பேர் கொண்ட குழுவினர் கலாசார பயணமாக திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரிக்கு கடந்த 29.08.2012 அன்று வந்தனர்.
அவர்களுக்கு கல்லூரி இயக்குனர் அந்துவான், முதல்வர் மார்கிரெட் பாஸ்டின் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் கலைக்காவிரி கல்லூரி மாணவிகளின் இந்திய கலாசார நடனங்கள் நடந்தது. அதை இலங்கை குழுவினர் கண்டு களித்தனர்.
அதே அரங்கத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இதையறிந்த தமிழ்தேச பொதுவுடமை கட்சி நிர்வாகி இனியன் தலைமையில் சுமார் 15 பேர் கருப்பு கொடியுடன் கல்லூரிக்குள் திடீரென புகுந்தனர்.
ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளை உடனே ரத்து செய்ய வேண்டும். கலாசார குழுவினரை கல்லூரியை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் காந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சிகாமணி மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று பிரபு, இனியன் உள்பட 15 பேரை கைது செய்தனர். இந்த பிரச்னையை தொடர்ந்து கல்லூரியின் முன்பக்க கேட் பூட்டப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கல்லூரி கேட் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இலங்கை குழுவினரை உடனடியாக திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.