இறந்த கோழிகளை உணவகங்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், பொங்கலூர், தாராபுரம், குண்டம் பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இலாப நோக்கில் வளர்க்கப்படும் இந்த கறிகோழி குஞ்சுகள் கடுமையான இட நெருக்கடியில் வளர்க்கப்படுகிறது.
மேலும், விரைவாக வளர வேண்டும் என்ற வேகத்தில் கோழிக்குஞ்சுகளை இரவு நேரத்தில் கூட தூங்கவிடாமல் தீவனம் தின்ன வைக்கிறார்கள். இதற்காக கூடுதலான தீவனம் கொடுக்கப்படுகிறது, இதனால் ஏற்படும் வயிற்றுக்கோளாறு மற்றும் நோய்வாய்ப்படுதல் உட்பட பல்வேறு காரணங்களால் இறக்கும் கோழிகளை, நிலத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும்.
ஓரளவுக்கு வளர்ந்த பிறகு இறக்கும் கோழிகளை, சில பண்ணையாளர்கள் குறைந்த விலைக்கு இதற்கென இருக்கும் முகவர்களிடம் விற்கின்றனர்.
அந்த கோழிகளை வாங்கிக்கொண்டுவரும் முகவர்கள், அவற்றை திருப்பூரில் உள்ள சில ஓட்டல்கள், இரவு நேர டிபன் சென்டர்கள், "டாஸ்மாக்' பார்கள் மற்றும் ரோட்டோர தள்ளுவண்டி கடைக்காரர்களை அணுகி, விற்பனை செய்கின்றனர்.
இறந்த கோழியை, சமயத்துக்கு ஏற்ப ஒரு கிலோ ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வீதம் பெறும் கடைக்காரர்கள், சில்லி சிக்கன், சிக்கன் வருவல், சிக்கன் “ப்ரை” என சமைத்து விற்கின்றனர்.
இறந்து போன கறிகோழி இறைச்சியை உட்கொள்ளும் போது, உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது, வயிற்று வலி, அஜீரண கோளாறு, தோல்அரிப்பு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். தாராபுரம் சுகாதார ஆய்வாளர் நிர்மல் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர், குண்டடம், மேட்டுக்கடை பஸ் ஸ்டாப் அருகே சோதனை செய்தபோது, ஒரு மொபட் மற்றும் ஒரு காரிலும் நிறைய இறந்த கோழிகள் இருந்தன.
அவற்றை கொண்டு வந்தவர்களிடம், சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்ததில், தாராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள பண்ணைகளில் இறந்த கோழிகளை வாங்கிச்சென்று திருப்பூரில் தினமும் சில்லி சிக்கன் போடுவதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த இருவரையும் குண்டடம் போலீசில் ஒப்படைத்தனர். போலிஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் திருப்பூர் செட்டிபாளையம், சந்தோஷ் காம்பவுண்டை சேர்ந்த பாலகுரு மகன் பாண்டி (வயது-52); செட்டிபாளையம் மணிகண்டன் நகர் கோகப்பன் மகன் முருகன் (வயது-40) என்று தெரியவந்தது. அந்த இருவரையும், கைது செய்த போலீசார் அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 270 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, எந்த நோயையாவது தொற்றி பரவச்செய்யக்கூடியது என தெரிந்தும், தீய எண்ணத்துடன் செய்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய “மொபட்” மற்றும் “காரை” பறிமுதல் செய்தனர்.