சென்னை சென்ட்ரலில் பா.ஜ.கவினர் திடீர் மறியல்
மார்த்தாண்டத்தை அடுத்த நித்திரவிளையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த எட்வின்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாவட்ட பா. ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து இன்று மார்த்தாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சியினர், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தடையை மீறி மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கு மறியல் செய்ய முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.
இதில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், பிரகாஷ் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.