சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.என். நேரு வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது சொத்து விவரங்களை போலீசார் சேகரித்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.என்.நேரு, அவரது மனைவி சாந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து கே.என். நேரு, அவரது மனைவி சாந்தா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
எனவே இந்த வழக்கில் இன்று (30.08.2012) நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்கு கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்பபட்டிருந்தது. அதன்படி கே.என். நேரு, தனது மனைவி சாந்தாவுடன் இன்று காலை 10.25 மணிக்கு கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கே.என். நேருவின் வக்கீல் பதஞ்சலி பாபு நேரில் ஆஜராகி தாக்கல் செய்து உள்ள மனுவில் எனது கட்சிக்காரருக்கு குற்றப்பத்திரிகை நகல் இதுவரை கைக்கு வரவில்லை. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் இருப்பதால் விசாரணையை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் விசாரணையினை 26.9.2012-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.