கசாப்புக்கு தூக்கு உறுதி: சிவசேனா பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
இவ்வழக்கை விசாரித்த மும்பை தனிக்கோர்ட்டு அஜ்மல் கசாப்புக்கு கடந்த 2010-ம் ஆண்டு மே 6-ந் தேதி மரண தண்டனை விதித்தது. பின்னர் அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அஜ்மல் கசாப் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அஜ்மல் கசாப்புக்கு தனிக்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.
சுப்ரீம்கோர்ட்டு அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்ததை அறிந்ததும் மும்பையில் உள்ள பாரதீய ஜனதா, சிவசேனா தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினார்கள்.
ஏராளமானோர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தீர்ப்பு பற்றி மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறும்போது, இவ்வழக்கில் மராட்டிய அரசு சார்பில் பல்வேறு ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் சமர்ப்பித்தோம். கசாப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை அளித் திருப்பது வர வேற்கத்தக்கது. இந்த தீர்ப்பால் மராட்டிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. இதை மராட்டிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடு கிறார்கள் என்றார். மும்பை இணை கமிஷனர் ஹமாசுராய் கூறும் போது, இவ்வழக்கில் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி கொடுத்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இந்த தீர்ப்பை கருதுகிறேன். இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுகிறது. அதை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது என்றார்.