கரூர் நகராட்சி பணிகள் தேக்க நிலை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் ஜெகதீஸ் பேசுகையில், தனது வார்டுக்குள்பட்ட சிவசக்தி நகர்வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என்றார்.
ம.தி.மு.க சத்தியமூர்த்தி பேசுகையில், கரூரில் நிலவும் கடும் குடிநீர்ப் பிரச்னைனைத் தீர்க்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர். ஸ்டீபன்பாபு பேசுகையில், கரூரில் திருப்பூர் குமரன் சிலை, தாந்தோனிமலையில் மகாத்மாகாந்தி சிலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கரூர் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே தற்போதுள்ள இடத்திலிருந்து புறநகர்ப் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. உடனடியாக தேர்வு செய்ய வேண்டும், நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டத்திற்கு அலுவலகம் மாறுவது எப்போது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் பேசியதாவது.
கரூர் நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் ரூ. 15.5 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், கரூர் நகர்மன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை காரணம். அதிகாரிகள் தங்களது போக்கை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.