2014ல் ராகுல்-மோடி இடையே நேரடி போட்டி: பெனிபிரசாத் வர்மா 2014-ம் ஆண்டில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் ராகுல்காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான நேரடி போட்டியாகவே இருக்கும் என மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய பெனி, ‘காங்கிரஸ் அல்லது மோடிதான் மத்தியில் ஆட்சி அமைக்க இயலும். ராகுல் காந்தி எங்களது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் 2014 பொதுத்தேர்தல் ராகுல்காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான நேரடி போட்டியாக்வே இருக்கும். வேறு எந்த கட்சியும் இந்தப் போட்டியில் நுழைய முடியாது. ராகுல்காந்தி பிரதமரானால் அவர் மன்மோகன் சிங்கின் ஆசியுடன் ஆட்சி செய்வார்’ என்றார். மேலும், எதிர்க்கட்சிகளை தவிர, உலகமே பிரதமரை நேர்மையானவர் எனக் கூறுகிறது எனவும் பெனி கூறினார். ராகுல் பற்றி மேலும் பேசிய பெனி, ‘தேசிய அளவில் காங்கிரஸ் மட்டுமே முஸ்லிம்களுக்காகப் போராடிவருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவர் மீதும் காங்கிரஸ் அக்கறை காட்டுகிறது. ஆனால் மற்ற கட்சிகள் வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன’ என்றார்.
மேலும் சமாஜ்வாடி போன்ற கட்சிகளுக்கு தேசிய அளவில் செல்வாக்கு இல்லை எனவும், அத்தகைய கட்சிகள் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது எனவும் பெனி கூறியுள்ளார்.