அரசு அலட்சியம் : யானை - மனித மோதல்களை அதிகரிக்கும் அவலம்
நீலகிரி மாவட்டம், மாயார் மற்றும் ஜக்கனாரை வழித் தடங்கள் மூலம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு புறத்திலிருந்து, மற்றொரு புறத்துக்கு, யானைகள் இடம் பெயர்வது வழக்கம். இந்த வழித் தடத்தில், ஆங்காங்கே அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் வழிமாறும் யானைகள், சாலைகள் வழியாக செல்கின்றன.
நீலகிரி மாவட்ட எல்லையான, பர்லியாறு மற்றும் மலையடிவாரத்தில் உள்ள, ஓடந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், அதிகளவில், தனியார், "ரிசார்ட்'கள், "முளைத்து' உள்ளன. இவற்றை, யானைகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக, வனத்துறை சார்பில், பல கி.மீ., தூரத்துக்கு, அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
இது தவிர, குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட, கன்னி மாரியம்மன் கோவில், புரூக்லேண்ட்ஸ், கே.என்.ஆர்., பர்லியாறு ஆகிய பகுதிகளில், யானை வழித்தடங்களில், புற்றீசல் போல், "காட்டேஜ்'கள் பெருகி உள்ளன.
வன துறையினரின் வரைபடத்தில், கல்லாறு - ஜக்கனாரை யானைகள் வழித்தடத்தில் உள்ள பட்டா நிலங்களில், ஆறு, "காட்டேஜ்'கள் மட்டுமே இருந்தன; தற்போது, "பார்ம் ஹவுஸ்' என்ற பெயரில், நூற்றுக்கணக்கான, "காட்டேஜ்'கள், "முளைத்து'ள்ளன. இதனால் வழி மாறும் யானைகள், வன விலங்குள், தனியார் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை முற்றுகையிடுகின்றன.
மலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதிய, "காட்டேஜ்'கள் உருவாகி வருவது, யானை - மனித மோதல்களை அதிகரிக்கும் .மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் ஒருங்கிணைந்து, யானை வழித்தடங்களில் உள்ள, "காட்டேஜ்'கள் குறித்து ஆய்வு நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.