லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சார் பதிவாளர் முத்துசாமியும் அலுவலக உதவியாளர் கணேசன் ஆகியோர் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர் என மாவட்டக் கலெக்டர் செல்வராஜ் எஸ்.பி. பதிவு துறையின் மாவட்ட பதிவாளர் ஆகியோர்களுக்கு பத்திர எழுத்தர்கள் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.
அவர்களின் புகார் மனுவில், சார்பதிவாளர் முத்துசாமி ஏழு லட்சமும், அலுவலக உதவியாளர் கணேசன் மூன்று லட்சமும் கையூட்டு கொடுத்துத்தான் இங்கேவந்துள்ளோம். எனவே, பத்திரப்பதிவுக்கு வருகின்ற நபர்களிடம் மதிப்புக்குத்தக்கவாறு ஒரு தொகையை எங்களுக்கு வாங்கித்தர வேண்டும் என்று மிரட்டலோடு நெருக்கடி கொடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசினால் உங்களின் மீது எங்களின் வகையாட்களைக் கொண்டு தீண்டாமை வழக்கு பதிவு செய்வோம் என்பதோடு தரமறுத்தால் உங்களின் பத்திர எழுத்து உரிமங்களை ரத்துசெய்து விடுவோம் தொழிலே செய்யமுடியாது என அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
சாதாரண ரசீது, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கும் இவ்வளவு மாமூல் என பிக்ஸ் பண்ணுகிறார்கள். எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று மிரட்டுகின்றார்கள். இதனால் எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம் என சங்கரன்கோவில் வெங்கடேசப்பெருமாள், ராமசாமி, திருவள்ளுவர், கோமதிநாயகம், ராஜேஸ்வரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்களின் குற்றச்சாட்டு குறித்து சார் பதிவாளர் முத்துசாமி கூறியதாவது, ஆலயங்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் பொருட்டு நிலுவையாக உள்ள நிலங்களை சட்டப்படி பதிவு செய்யமுடியாது. ஆனால் பத்திர எழுத்தர்கள் இதனை பதிவு செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தனர். நான் சட்டச்சிக்கலை சொல்லி மறுத்தேன் அதற்காக அவர்கள் என் மீது தகாத குற்றச்சாட்டை வைக்கின்றனர் என்றார்.
படம்: ராம்குமார்