ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து
அன்னா ஹசாரே அரசியலில் வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா,
அரசியலில் ஊழல் நிரம்பி வழிகிறது. உலக நாடுகளில் ஊழல் பல வடிவங்களில் நடைபெறுகிறது. ஊழலை பற்றி மக்களும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் விவாதிக்க வேண்டும். நாட்டில் காங்கிரசுக்கு மாற்றாக ஜனதா கட்சியை ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கினார்.
ஆனால் அவரால் 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்குள் உள்கட்சி வேறுபாடுகளால் அந்த கட்சி பல பிரிவுகளால் சிதறிவிட்டது. அவருடைய முயற்சி வெற்றி பெறவில்லை. அது போன்று தான் அன்னா ஹசாரேவின் முயற்சியும் வெற்றி பெறுவது கடினம்.
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை சேராத ஒருவர் பிரதமர் ஆவார் என்று அத்வானி சொல்லியுள்ளார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி. நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு பழுத்த அனுபவம் இருக்கிறது. அதனால் அவருடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.