பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
கர்நாடக சட்டசபையில் 02.08.2012 அன்று கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா குறுக்கிட்டு பேசியதாவது:-
கல்வி துறைக்கு போதிய நிதி ஒதுக்கி வளர்ச்சி செய்ய வேண்டும் என்று எனது ஆட்சி காலத்தில் திட்டமிட்டு இருந்தேன். சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால், எனது 3 ஆண்டு ஆட்சி காலத்தில் எனது கட்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி, எதிர்கட்சியினர் ஆனாலும் சரி, எனக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இப்போது உள்ள குழந்தைகள் அதிக திறமை உள்ளவர்களாகவும், அறிவு நிறைந்தவர்களாகவும் உள்ளனர். எனது பேரக்குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு கூட என்னால் பதில் அளிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளனர்.
எனவே அவர்களுக்கு தகுந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆசிரியர் பயிற்சி கல்வி மட்டும் படித்திருந்தால் அது போதுமானதாக இருக்காது. எனவே பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
இதேபோல், அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் மக்கள் செல்ல விரும்புவது இல்லை. ஏனென்றால், சிகிச்சை முடிந்து ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப முடியுமா? என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு பள்ளிகள், ஆஸ்பத்திரிகளை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினார்.