வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. 627 மாவட்டங்களில் 306 மாவட்டங்களில் பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. 94 மாவட்டங்களில் பருவமழை மிகக்குறைவாக பெய்திருக்கிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி நிலப்பரப்பு குறைந்துள்ளது. கரிப் பருவ பயிர்ச்சாகுபடியில் பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு நடப்பு பயிர்களை காப்பாற்றும் விதத்தில் பாதி விலையில் டீசல் வழங்குவதற்கு மத்திய விவசாய மந்திரி சரத்பவார் தலைமையிலான வறட்சிக்கான அதிகாரம் வழங்கப்பட்ட மத்திய மந்திரிகள் குழு முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிலவுகிற வறட்சியை மத்திய விவசாய மந்திரி சரத்பவார், ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேசுடன் வந்து ஆய்வு செய்தார்.
பின்னர் சரத்பவார் கூறியதாவது:-
வறட்சி பாதித்த அனைத்து மாநிலங்களிலிருந்தும் அறிக்கை வரப்பெற்றுள்ளோம். இந்த மாநிலங்களுக்கு நிதி வழங்குவது தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக வறட்சிக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட மத்திய மந்திரிகள் குழு கூட்டம் வரும் 7-ந் தேதி நடத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தமட்டில், வறட்சி நிவாரணத்துக்கான உடனடி தேவை, நீண்ட கால தேவைபற்றிய விவரங்களுடன் புதிய அறிக்கை அளிக்குமாறு கூறி உள்ளோம்.
ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தை 100 நாட்களுக்கு பதிலாக 200 நாட்களுக்கு செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடகம் கேட்டுள்ளது. இது 150 நாட்களாக உயர்த்தப்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கர்நாடக மாநிலத்துக்கு ரூ.700 கோடி விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.