உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று (02.08.2012) காலை சென்னை திரும்பினார். சென்னையில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்த அவர், ஜப்பான் சுற்றுப்பயணம் குறித்து விவரித்தார். மேலும் கட்சி விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்தார்.
பின்னர் மாலை மதுரை திரும்பிய மு.க.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உட்கட்சி பிரச்சனை பற்றி கேட்க வேண்டாம். ஜப்பான் சுற்றுப்பயணம் குறித்து கேளுங்கள் என்றார்.
பின்னர் பேசிய அவர், கடந்த 10 நாட்களாக அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு பல்வேறு கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். அதனை ஏற்று 4 தொழில்துறை இயக்குநர்கள் என்னை சந்தித்து, இந்தியாவில் அக்டோபர் 4ல் நடைபெறும் மும்பை கெமிக்கல் கண்காட்சியில் கலந்துகொள்வதாக ஒப்புக்கொண்டனர் என்றார்.தொடர்ந்து திமுகவினர் மீது நிலஅபகரிப்பு வழக்கு தமிழக அரசு போட்டு வருகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல் அமைச்சருக்கும், அரசுக்கும் இதுதான் வேலை. வேறு எந்த வேலை பார்க்கிறார்கள். பொய் வழக்கு போடுவதற்குத்தான் வேலை செய்கிறார்கள். மற்ற வேலைகளை பார்ப்பதில்லை என்றார்.