போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகமெங்கும் பொது விநியோக முறையைப் பலப்படுத்தக்கோரி, ஜுலை 20ம் தேதி 3020 ரேஷன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டமும், ஜுலை 30ம் தேதி 200க்கும் மேற்பட்ட மையங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு 30,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இயக்கமும் மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்குமான ரேஷன் முறையை வலியுறுத்தி டெல்லியில் இடதுசாரிக் கட்சிகள் கலந்து கொள்ளும் தர்ணாவும் துவங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, மண்ணெண்ணெய், பருப்பு, உளுந்து கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன என்பது வரை பல்வேறு கோரிக்கைகள் மக்கள் மத்தியிலி ருந்து வந்துள்ளன. இக்கோரிக்கைகளை, மாநில அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என்றும், ஸ்தல அளவில் மேலும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து, பொருத்தமான நீடித்த போராட்டங்கள் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.