ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது:
திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்

புது சினிமா ரிலீஸ் ஆன அன்றைக்கே திருட்டு சிடி தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப்பிலிப்பிடம் நான் ஈ பட தயாரிப்பாளர் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த மாதம் 6-ந் தேதி நான் தயாரித்த நான் ஈ என்ற சினிமா படம் வெளியானது.
ஆனால் அந்த படம் வெளியான அன்றே திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனவே திருட்டு சி.டி. தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜி. ஜான்நிக்கல்சன் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விஜயகுமாரி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. நான் ஈ படம் செயற்கைகோள் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
வழக்கமாக புதிய படங்கள் வெளியாகும்போது பிரிண்ட் போடப்பட்டு ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
திருட்டு சி.டி.க்கள் தயாரிப்பை தடுப்பதற்காக நான் ஈ படம் சி கியூப் தொழில் நுட்ப முறையில் செயற்கை கோள் மூலம் தியேட்டர்களில் வெளியானது.
இதற்காக நான் ஈ படம் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டருக்கும் ரகசிய குறியீடு வழங்கப்பட்டிருந்தது. அந்த ரகசிய குறியீடை தியேட்டர் ஆபரேட்டர் பயன்படுத்தி டவுன்லோடு செய்து நேரடியாக புரொஜக்டர் மூலம் திரையில் சினிமா படம் காட்டப்படும்.
இப்படி தியேட்டர் திரையில் வெளியாகும் சினிமா படங்களை திருட்டு சி.டி.யாக தயாரிக்க முடியும். நான் ஈ படமும் அந்த வகையில்தான் திருட்டு சி.டி.க்களாக தயாரிக்கப்பட்டிருப்பதை போலீசார் முதலில் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த திருட்டு சி.டி. எந்த ஊரில் உள்ள தியேட்டரில் தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பாக ஆராய்ந்தனர். அந்த திருட்டு சி.டி.யில் கோவையில் உள்ள தியேட்டருக்கு வழங்கப்பட்ட ரகசிய குறியீடு இருப்பது தெரிய வந்தது. அதைவைத்து ஆராய்ந்தபோது அந்த ரகசிய குறியீடு கோவை சவுரிபாளையத்தில் உள்ள வேல்முருகன் தியேட்டருக்கு வழங்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த தனிப்படை போலீசார் வேல்முருகன் தியேட்டருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த தியேட்டர் உரிமையாளர் சதீஸ்குமார்(வயது 32), ஆபரேட்டர் முகமது அலி ஜின்னா (25) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தியேட்டர் புரொஜக்டரையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்டு தியேட்டர் மூடப்பட்டது.