ஜூலை 30-ல் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விலைவாசி உயர்வை எதிர்த்தும், ஒருங்கிணைந்த பொது விநியோக முறை மூலம் உணவு உரிமையை வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகளிட் 3-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பொதுவிநியோக முறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்யக்கூடாது, மாநிலத்துக்கு வழங்க வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் கோட்டாவை குறைக்காமல் வழங்கிட வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய விலை அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியும்,
ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொதுவிநியோக முறையின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு போதுமான பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதிப்படுத்திட வேண்டும், 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஜூலை 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கட்சியின் சார்பில் 1500-க்கு மேற்பட்ட ரேசன் கடைகளில் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் மேற்கூறிய குறைபாடுகள் நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டது. குறைபாடுகளைச் சரிசெய்யவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 30-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.