முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இலங்கை நாளை மோதல்
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹம்பன் டோடா மைதானத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணி கடைசியாக மார்ச் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் விளையாடினர். அதன் பிறகு தற்போது தான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் இலங்கை தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. நட்சத்திர வீரர் தெண்டுல்கர் இந்த தொடரில் விளையாடததால் ஷேவாக்குடன் தொடக்க வீரராக யார் விளையாடுவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.