ஜெயலலிதா கையெழுத்து போட்டு மோசடி: சென்னையில் 2 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் சமீபத்தில் நடந்தது. அந்த சமயத்தில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி கல்வித்துறைக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது.
குமரி மாவட்டம் கோட்ட விளையைச் சேர்ந்த பென்னிலா என்ற பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதமும், முதலமைச்சர் கையெழுத்திட்டது போன்ற சிபாரிசு கடிதமும் அதில் இருந்தது.
பென்னிலா எழுதிய கடிதத்தில், நான் சிவகங்கையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நான் கர்ப்பிணியாக உள்ளேன். எனவே எனக்கு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இட மாறுதல் வழங்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.
இதனை பரிசீலிக்கும்படி கல்வித்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சிபாரிசு செய்வது போன்ற மற்றொரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் ஜெயலலிதா பெயரில் ஆங்கிலத்தில் கையெழுத் திடப்பட்டு இருந்தது.
முதலமைச்சர் தனது கையெழுத்தை தமிழில்தான் போடுவார். இந்த கடிதத்தில் ஆங்கிலத்தில் கையெழுத்து இருந்ததால் சந்தேகப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை அப்படியே வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிக்கான் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் எட்வின் திடீரென பள்ளி கல்வித்துறைக்கு வந்தார். அவர் கல்வித்துறைக்கு வந்த கடிதத்தின் நகலை வைத்திருந்தார்.
இந்த கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அதிகார தோரணையில் கேட்டார். உடனே கல்வித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பிரின்ஸ் எட்வினை கைது செய்தனர். அவர் ராயப்பேட்டையில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் பெயரை போல் கடிதம் தயாரித்து அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதற்காக ராயப்பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவர் தமிழக அரசின் போலி ரப்பர் ஸ்டாம்பு தயாரித்து கொடுத்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
பிரின்ஸ் எட்வின் மேலும் பல மோசடிகளை செய்து உள்ளாரா? என்ற சந்தேகத்தின் பேரில் அவரது அலுவலகத்தையும் முரளி அலுவலகத்தையும் போலீசார் சோதனையிட்டனர். ஆனால் வேறு கடிதம் எதுவும் சிக்கவில்லை.
முரளியிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் கடிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிரின்ஸ் எட்வின் கூறும் போது, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் எனக்கு வேண்டப்பட்டவர். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கடிதத்தை போலியாக தயாரித்து அனுப்பினேன். வேறு எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்றார்.
போலீசார் அவர்கள் மீது ஆள் மாறாட்டம் (419), போலி ஆவணம் தயாரித்தல் (465), ஆவணத்தை பதிவு செய்தல் (468), அரசு முத்திரையை போலியாக தயாரித்தல் (471), அரசு போலி முத்திரையை பயன்படுத்துதல் (472) ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.