கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார்:
ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய்சிங், சல்மான் குர்ஷித் இருவரும் ராகுல் காந்தி விரைவில் முக்கிய பதவி ஏற்பார் என்று கடந்த சில தினங்களாக கூறி வருகிறார்கள்.
அடுத்த பிரதமர் மன்மோகன் சிங் இல்லை. ராகுல்தான் என்றும் அவர்கள் சூசகமாக தெரிவித்தனர். ராகுல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. எனவே ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுபற்றி சோனியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி பெரிய பொறுப்புக்கு வருவது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் சார்பில் வேறு யாரும் அதை தீர்மானிக்க முடியாது என்றார்.
இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார் என்று சூசகமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக மவுனத்தை கலைத்த அவர் கூறுகையில், பெரிய பொறுப்பை ஏற்பது பற்றி முடிவு எடுத்து விட்டேன். ஆனால் அந்த பொறுப்பில் எப்போது இருந்து செயல்பட தொடங்க வேண்டும் என்ற நேரத்தை மேலிட தலைவர்கள்தான் தீர்மானித்து சொல்ல வேண்டும் என்றார்.
இதன் மூலம் காங்கிரஸ் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு ராகுல்காந்தி வரப்போவது இன்று உறுதியாகி விட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் ராகுல் காந்தி பெரிய பொறுப்புக்கு வருவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.