கறுப்பு பணம் பற்றி பேசவே பிரதமர் தயாராக இல்லை : பாபா ராம்தேவ்
கறுப்பு பண விவகாரம் தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ், ஆகஸ்டு 9-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார். அதற்கு ஆதரவு திரட்ட அவர் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வருக்கு வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம், ‘’அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் 80 சதவீத கறுப்பு பணம் இந்தி யாவில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார்? அந்த பணம் எப்படி வந்தது? என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கறுப்பு பண விவகாரத்தில் பாகிஸ்தானில் பிரதமரே பதவி விலகினார். ஆனால் இங்கு கறுப்பு பணம் பற்றி பேசவே பிரதமர் தயாராக இல்லை. சின்ன சின்ன தவறுகளுக்காக பொதுமக்களை வருமானவரித்துறை தண்டிக்கிறது. ஆனால், ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது’’என்று கூறினார்.