நாட்டுதுப்பாக்கியால் சுட்டு புள்ளிமான் வேட்டை: 3 பேர் கைது
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் காப்புக்காடு பகுதியில் ஏராளமான மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. அப்பகுதியில், வன விலங்குகளுக்கு போதுமான குடிநீர் இல்லை. கசிவு நீர் குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. அதனால், விவசாய பகுதிகளை நோக்கி மான்கள் செல்வது வழக்கமாகி உள்ளன.
இந்நிலையில், மான்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதால் மான்வேட்டையும் அடிக்கடி நடக்கிறது. ஒரு கும்பல் தினமும் மான் வேட்டைக்கு செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சாத்தனூர் வனச்சரக அலுவலர் சம்மந்தம் தலைமையில், வனவர் சேகர், வன காப்பாளர்கள் குமார், கோவிந்த ராஜ், சேகர், சகாதேவன் ஆகியோர் ராதாபுரம் காப்புக்காடு பகுதியில் நேற்று அதிகாலை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நாட்டுத் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. உடனடியாக, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தப்பியோட முயன்ற 3 பேரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அமாவாசை, இந்திராநகர் தண்டபாணி என தெரியவந்தது. வேட்டையா டியதில் இறந்த புள்ளிமான் மற்றும் கள்ளத்துப்பாக்கி மற்றும் டார்ச் லைட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மான் வேட்டையாடிய 3 பேரும் செங்கம் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.